புதன், 16 பிப்ரவரி, 2011

டாடா கடித விவகாரம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி

சென்னை, பிப்.16- முதல்வர் கருணாநிதிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய கடிதம் தொடர்பாக விளக்கம் கேட்டு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் தரகர் நீரா ராடியா மூலம் நேரடியாக கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டதாக  கூறப்படும் ரத்தன் டாடாவின் கடிதத்தினை அவசர, அவசரமாக கருணாநிதி மறுத்திருப்பது மேலும் பல புதிய வினாக்களை, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  இந்தக் கடிதம் ஒரு பிரபலமான தேசிய நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட போதும், அந்தக் கடிதம்  தொலைக்காட்சி சானல்களில் காண்பிக்கப்பட்ட போதும், எந்தவிதமான மறுப்பையும் கருணாநிதி தெரிவிக்கவில்லை.

 இது குறித்த பொருத்தமான, அர்த்தமுள்ள கேள்விகளை நான் எழுப்பிய பிறகு தான் அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.  இந்தக் கடிதம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்ட போது அதற்கு கருணாநிதி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? இந்தக் கடிதத்தை எழுதிய ரத்தன் டாடா மற்றும் இந்தக் கடிதத்தை கருணாநிதியிடம் நேரடியாக கொடுத்ததாக கூறப்படும் நீரா ராடியா ஆகியோர் ஏன் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை?

இது மின்னணு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டக் கடிதம் அல்ல. டாடாவின் பம்பாய் அலுவலக லெட்டர் பேடில் ரத்தன் டாடாவால் கைப்பட எழுதப்பட்ட கடிதம். டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் நாராயண் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ரத்தன் டாடா கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தினை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததோடு, “அப்போதைய மத்திய அமைச்சர் ராசாவின் கொள்கை அறிவிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தொழிற்துறையில் உள்ள சுயநலவாதக் குழுக்களால் பொது விவாதம் எழுப்பப்பட்ட தருணத்தில் எழுதப்பட்ட கடிதம் இது” என்று தெரிவித்து, அந்தக் கடிதத்தில் உள்ள கருத்தினை நியாயப்படுத்தி இருக்கிறார்

.  நீரா ராடியா இது போன்ற கடிதத்தினை தன்னிடம் அளிக்கவில்லை என்று கருணாநிதி தற்போது தெரிவித்து இருக்கிறார். டாடாவிடம் இருந்து இதுபோன்ற கடிதத்தினை தான் பெற்றதே இல்லை என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இந்தக் கடிதத்தினை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஊடகங்கள் மீது கருணாநிதி வழக்கு தொடரப் போகிறாரா? டாடா குழுமத்தின் மூத்த அதிகாரியான ராஜீவ் நாராயண் பொய் சொல்லியிருக்கிறார் என்று கருணாநிதி பகிரங்கமாக அறிவிப்பாரா?

மத்திய புலனாய்வுத் துறையின் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த புலன் விசாரணையில் கூர்ந்து விசாரிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் இந்தக் கடிதமும் ஒரு முக்கிய ஆவணம் என்று 13.11.2007 தேதியில் எழுதப்பட்ட கடிதத்தை முதலில் வெளியிட்ட நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த கடிதத்தில் உள்ள கருத்துகளிலிருந்தும், டாடா குழும மூத்த அதிகாரியின் அறிக்கையிலிருந்தும் கருணாநிதியின் கூற்று மாறுபட்டு இருப்பதால், இந்தக் கடிதத்தில் மேலோட்டமாகத் தெரிவதைக் காட்டிலும், வெளிவர வேண்டிய தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பது மத்திய புலனாய்வுத் துறைக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.

 மேலும், ரதன் டாடாவின் கடிதம் கற்பனையானது, கட்டுக்கதை என்று கருணாநிதி வருணித்துள்ளதில் இருந்து, கருணாநிதியால் மறுக்கப்படாத, கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த மற்ற தகவல்கள் அனைத்தும் மறுக்க முடியாத உண்மை என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நில விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவுடன் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்தி தொலைபேசியில் உரையாடியது; நீரா ராடியா மற்றும் கனிமொழி உரையாடல்களில், கருணாநிதியின் இளைய மகள் கனிமொழி, தயாநிதி மாறனை ஒதுக்கிவிட்டு, ஆ. ராசாவுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப வாதிட்டது; நீரா ராடியா மற்றும் வீர் சங்வி உடனான உரையாடலில், தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை உறுதி செய்யும் பொருட்டு, தயாநிதி மாறன் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளுவுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாக நீரா ராடியா தெரிவித்தது ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதிலும் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்பும், கருணாநிதியால் மறுக்கப்படவில்லை. அதாவது கருணாநிதியால் மறுக்கப்படாத அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள

இதிலிருந்து, எந்த மாதிரியான மனிதர் முதல்வராக தமிழ்நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதையும், நாட்டை சுரண்டுவதற்காக எம்மாதிரியான நெறிமுறைகளை கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையும், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை தமிழக மக்களிடத்தில்தான் தற்போது உள்ளது. வருகின்ற சட்டடன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற சுயநலவாத, சந்தர்ப்பவாத கும்பல் இந்த நாட்டை மீண்டும் ஆட்சி புரிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் தமிழக மக்களிடத்தில் தான் இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக